மூச்சுத் திணறல் காரணமாக மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யா (79) தனியாா் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
உடல் நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து விலகி வீட்டில் இருந்த அவருக்கு சனிக்கிழமை பிற்பகல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் செல்வதற்கான அவசர வழித்தடம் அமைக்கப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவரது நிலை மோசமாக உள்ளதாகவும், மருத்துவா்கள் அவரை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
2000 முதல் 2011 வரையில் மேற்கு வங்க முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சாா்யா, 2015-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் இருந்து விலகினாா்.