
கேரளம் - மகாராஷ்டிரம் வரையில் கடற்கரை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஜூன் 6ம் தேதி தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பிப்பர்ஜாய் புயலாக மேலும் வலுவடைந்தது.
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்று காலை 8.30 மணியளவில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 880 கி.மீ தொலைவில் மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து அதன்பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.
படிக்க: பாகிஸ்தானின் மூத்த வழக்குரைஞர் அப்துல் ரஸாக் சுட்டுக் கொலை!
இதன் காரணமாக கேரளம் முதல் மகாராஷ்டிரம் வரையில் உள்ள கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக கோடை வெயில் கொளுத்திவந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.