கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கரின் சில பகுதிகளைத் தவிர்த்து நாடு முழுவதும் இடதுசாரி தீவிரவாதத்தை நரேந்திர மோடி தலைமையிலான அரசு கட்டுப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. பாகல் தலைமையிலான அரசு முடிவுக்கு வருவதற்கான நேரம் தொடங்கிவிட்டது. சத்தீஸ்கர் மக்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சத்தீஸ்கரின் சில பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் இடதுசாரி தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு ஊழலில் ஈடுபடுகிறது. சத்தீஸ்கர் மக்களை ஏமாற்றுவதற்கு பூபேஷ் பாகல் வெட்கப்பட வேண்டும். பாகல் தலைமையிலான அரசு 2000 கோடி மதிப்பிலான மதுபான ஊழல், 500 கோடி மதிப்பிலான நிலக்கரி ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது. ஊழலில் திளைத்துள்ள இந்த அரசினை மாநிலத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா? காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். முதியவர்களுக்கு அவர்களது முதியோர் உதவித் தொகை சரிவர வழங்கப்படுவதில்லை என்றார்.