நிதிப் பற்றாக்குறை இலக்கு 67.8 சதவீதத்தை எட்டியது

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கானது ஜனவரியில் 67.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கானது ஜனவரியில் 67.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

அரசின் செலவினத்துக்கும் வருவாய்க்கும் இடையேயான வேறுபாடே நிதிப் பற்றாக்குறையாகும். செலவினத்தை சமாளிப்பதற்காக அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை அளவிடும் கருவியாகவும் நிதிப் பற்றாக்குறை உள்ளது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ரூ.17.55 லட்சம் கோடிக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.4 சதவீதம் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.11.9 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக கணக்குகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (சிஜிஏ) தெரிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த இலக்கில் 67.8 சதவீதம் ஆகும்.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த இலக்கில் 58.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. நடப்பு நிதியாண்டில் அதிகரித்த செலவினம், சரிவடைந்த வருவாய் ஆகியவற்றின் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் வரி வருவாய் ரூ.16,88,710 கோடியாக உள்ளது. இது பட்ஜெட் இலக்குடன் ஒப்பிடுகையில் 80.9 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வரி வருவாயானது ஒட்டுமொத்த இலக்கில் 87.7 சதவீதமாக இருந்தது.

அரசின் நிதிப் பற்றாக்குறையானது அடுத்த 2023-24-ஆம் நிதியாண்டில் 5.9 சதவீதமாகவும், 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 4.5 சதவீதமாகவும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com