காலிஸ்தான் ஆதரவு கருத்துகளை பரப்பிய 8 யூ-டியூப் சேனல்களை, மத்திய அரசு முடக்கியது.
இதுதொடா்பாக, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலா் அபூா்வா சந்திரா வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘காலிஸ்தான் ஆதரவு கருத்துகளுக்காக, கடந்த 10 நாள்களில் 8 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இவை, வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்ட சேனல்களாகும். பஞ்சாபில் பிரச்னையை தூண்டும் வகையில், இந்தச் சேனல்களில் பஞ்சாபி மொழியில் உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருந்தன’ என்றாா்.
பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளரும் சீக்கிய மதபோதகருமான அம்ரித்பால் சிங், தனது உதவியாளா்களில் ஒருவரை விடுவிக்க வலியுறுத்தி, காவல் நிலையம் ஒன்றில் ஆதரவாளா்களுடன் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி, அண்மையில் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், மேற்கண்ட நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
யூ-டியூபில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை தாமாக கண்டறிந்து முடக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துமாறு, அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனினும், இந்தியாவில் பிராந்திய மொழிகளில் உள்ளடக்கங்கள் இடம்பெறுவதால், ஆட்சேப கருத்துகளை தாமாக கண்டறிந்து முடக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் யூ-டியூப் தரப்பில் சிக்கல்கள் நிலவுதாக கூறப்படுகிறது.