குடியரசுத் தலைவர் முர்மு மூன்று நாள் பயணமாகத் தனது சொந்த ஊரான ஒடிசாவின் மயூர்பஞ்சிற்கு வியாழக்கிழமை வந்தடைந்தார்.
பதம்பஹாட் ஹெலிபேடில் முர்முவை ஆளுநர் கணேஷி லால், மத்திய அமைச்சர் பிஷேஷ்வர் துடு, ஒடிசா எஃகு மற்றும் சுங்கத்துறை அமைச்சர் பிரபுல்லா மல்லிக் மற்றும் உள்ளூர் எம்எல்ஏக்கள் ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முர்மு தனது சொந்த ஊரை அடைந்ததும், சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்துச்சென்று, வாழ்த்துவதற்காக சாலையின் இருபுறமும் ஆவலுடன் காத்திருந்த பழங்குடியின மக்களை சந்தித்து பேசினார்.
ஹெலிபேடில் இருந்து சுமார் ஐந்து கி.மீட்டர் தொலைவில் உள்ள ராய்ரங்பூர் சப்-டிவிஷனில் உள்ள பஹத்பூர் கிராமத்தில் தனது மாமியார் வீட்டிற்கு முர்மு செல்கிறார். அவரை வரவேற்க ராய்ரங்பூர் மற்றும் பஹத்பூரில் ஏராளமான போர்டுகளும் பேனர்களும் வைக்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு 100 அதிகாரிகள் தலைமையில் சுமார் 1,500 காவலர்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, சொந்த ஊரான ராய்ரங்பூருக்கு முர்முவின் முதல் வருகை இதுவாகும். பஹத்பூரில் உள்ள தனது மறைந்த கணவர் ஷியாம் சரண் சிலைக்கு முர்மு மாலை அணிவித்து, அப்பகுதியில் உள்ள எஸ்எல்எஸ் நினைவுப் பள்ளிக்குச் சென்றார்.
குடியரசுத் தலைவர் பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா டியோ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதோடு, சிமிலிபால் புலிகள் காப்பகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
ராய்ரங்பூருக்கு அருகிலுள்ள படபந்தா அருகே மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக 100 அடி உயரக் கொடியையும் அவர் திறந்து வைக்கிறார்.