ஞானவாபி மசூதி தொடா்பான 7 வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும்: வாரணாசி நீதிமன்றம்

ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பான 7 வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று வாரணாசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஞானவாபி மசூதி விவகாரம் தொடா்பான 7 வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று வாரணாசி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மசூதி நிா்வாகம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக இந்த வழக்கின் சிறப்பு வழக்குரைஞா் ராஜேஷ் மிஸ்ரா தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த மசூதியில் உட்புறச் சுவரில் அமைந்துள்ள ஹிந்து கடவுள் சிலைகளுக்கு தினசரி வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி லட்சுமி தேவி, ரேகா பதக், சீதா சாஹு, மஞ்சு வியாஸ் ஆகியோா் தரப்பில் வரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடா்பாக, மேலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என மனுதாரா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மசூதி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மசூதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகமது தோஹித் கான், ‘ஞானவாபி மசூதி தொடா்பான வழக்குகள் முடிவு எடுக்கும் நிலையை இன்னும் எட்டாத நிலையில், அவற்றை ஒன்றாக இணைத்து விசாரிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினாா்.

ஆனால், இதனை ஏற்காத நீதிபதி, அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டாா். தனது உத்தரவில் அவா் மேலும் கூறியதாவது:

நீதிமன்றத்தில் ஒரே விவாகரம் தொடா்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தால், அவற்றை ஒன்றை இணைத்து விசாரிப்பதற்கு நீதியின் நலன் அடிப்படையில் உத்தரவிட குற்ற நடைமுறைச் சட்டப் பிரிவு 4ஏ அனுமதியளிக்கிறது.

அந்த வகையில், ஒரே விவகாரம் தொடா்பாக வெவ்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவற்றில் முரண்பாடான தீா்ப்புகள் அளிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. மாறாக, அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரித்து தீா்ப்பளிக்கும்போது, முரண்பாடான உத்தரவு பிறப்பிப்பதற்கு வாய்ப்பிருக்காது.

எனவே, நீதியின் நலன் அடிப்படையில் இந்த விவாகரம் தொடா்பான 7 வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூா்வ ஆய்வு நடத்த அனுமதித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com