புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை நினைவுகூறும் விதமாக புதிய 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை நினைவுகூறும் விதமாக புதிய 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த புதிய நாணயம் தொடர்பாக பொருளாதார நிகழ்வுகள் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பினை நினவுகூறும் விதமாக 75 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த நாணயத்தின் எடை 34.65 கிராம் முதல் 35.35 கிராம் வரை இருக்கும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோகர் தூணில் உள்ள சிங்க சின்னம் இடம் பெற்றிருக்கும். அதே பக்கத்தில் தேவநகரியில் பாரத் என்பதும் ஆங்கிலத்தில் இந்தியா என்பதும் எழுதப்பட்டிருக்கும். இந்த சிங்கச் சின்னத்தின் கீழ் ரூயாய் அடையாளமும், 75 ரூபாய் மதிப்பும் குறிப்பிடப்பட்டிருக்கும். நாணயத்தின் மறுபக்கத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்தின் படமும், 2023 ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2023 என்ற ஆண்டும் எண்ணில் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.