
மும்பை: மும்பை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுவிட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்துள்ளது.
அதன்படி, மும்பை உயர் நீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்டி தனுகா நியமனம் செய்யப்பட்டுள்ளது. அவர் இன்னும் 4 நாள்களில் பணி ஓய்வுபெறப்போகும் நிலையில், இந்த உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் மிக உயரிய பொறுப்பான தலைமை நீதிபதி என்ற பொறுப்பை மிகக் குறுகிய காலம் வகிக்கப் போகிறவர் தனுகா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்வில், மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தனுகா பதவியேற்றுக்கொள்ளவிருக்கிறார்.
கடந்த 2012ஆம் ஆண்டு நீதிபதி ரமேஷ் தனுகா மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது ஓய்வுபெறும் காலம் 2023 மே 30. இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி தனுகாவை மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில், குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியிருக்கிறது.
கடந்த ஐந்து மாதங்களாக தலைமை நீதிபதி இல்லாமல் மும்பை உயர் நீதிமன்றம் இயங்கி வந்த நிலையில், புதிய தலைமை நீதிபதி நாளை பதவியேற்கிறார். அடுத்த ஒரு சில நாள்களில் அவர் ஓய்வுபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.