மத்திய பிரதேசத்தில் வாக்குப் பெட்டி பாதுகாப்பு அறைக்குள் நுழைந்து தபால் வாக்குப் பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் திறக்கும் அதிர்ச்சி விடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாலகாட் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் உள்ள சீல் வைக்கப்பட்ட அறைக்குள் நுழைந்த மாவட்ட ஆட்சியர் கிரிஷ் மிஸ்ரா, தபால் வாக்குப் பெட்டிகளை திறக்கும் விடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸின் பதிவில், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு அறிவிக்காமல் வாக்குப் பெட்டி அறைக்குள் மாவட்ட ஆட்சியர் நுழைந்து தபால் வாக்குப் பெட்டிகளை திறந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மேலும், அனைத்து காங்கிரஸ் தேர்தல் பணியாளர்களும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரிஷை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.