ஒடிசாவின் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோரில் அடையாளம் காணப்படாத 28 பேரின் சடலங்களில் 9 பேரின் உடல்கள் பாரம்பரிய சடங்குகளின்படி பரத்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
பாலசோா் மாவட்டத்தில் பாஹாநகா ரயில் நிலையத்தில், அடுத்தடுத்து 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய கோர விபத்து ஜூன் 2-ஆம் தேதி இரவு நிகழ்ந்தது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், 291 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரயில் விபத்தில் பயணித்த 28 பேரின் உடல்களை அடையாளம் காணப்படாத நிலையில், சடலங்கள் புவனேசுவரத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டெய்னா்களில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ரயில் விபத்து சம்பவம் நடைபெற்று 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை உறவினர்கள் யாரும் உயிரிழந்தவர்களைத் தேடி வராததால் இவர்களது உடல்களை அடக்கம் செய்ய புவனேசுவரம் மாநகராட்சி முடிவு செய்தது. அதனடிப்படையில், அடையாளம் தெரியாத பயணிகளை மரியாதையுடனும், கண்ணியத்துடன் தகனம் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, உரிமை கோரப்படாத 28 உடல்களில் ஒன்பது உடல்கள் பாரம்பரிய சடங்குகளின்படி பரத்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. மூத்த அதிகாரியின் மேற்பார்வையில் எய்ம்ஸில் இருந்து சவ ஊர்த்தியில் சடலங்கள் கொண்டுவரப்பட்டது.
பர்தீப் சேவா அறக்கட்டளையின் 12 பேர் கொண்ட குழு விதிகளின்படி உடல்களை தகனம் செய்தது. அறக்கட்டளையின் உறுப்பினர்களின் ஒருவர் முகத்திற்கு தீ வைத்து மின்தகன மேடையில் உடல்கள் எரியூட்டப்பட்டது. மின் தகன மேடையில் ஒரே நேரத்தில் பல உடல்களை தகனம் செய்யலாம். இருப்பினும் பாதுகாக்கப்பட்ட உடல்கள் உறைந்த நிலையில் இருப்பதால் வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு உடலையும் தகனம் செய்வதற்கு குறைந்தது 4 மணி நேரம் எடுத்தது. மைனஸ் வெப்பநிலையில் உடல்கள் சேமிக்கப்பட்டதால் சடலங்கள் பனிக்கட்டிகளாக மாறிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.