ஒடிசாவின், பத்ரக்கில் காயமடைந்த தந்தையை 50 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
நாடிகன் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுஜாதா சேத்தி(14). கடந்த அக்.22 அன்று நடந்த குழு மோதல் ஒன்றில் சிறுமியின் தந்தை சம்புநாத் காயமடைந்தார். காயமடைந்த தந்தையைத் தள்ளுவண்டியில் வைத்து, தனது கிராமத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள தாம் நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் தந்தையை பத்ரக் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி பரிந்துரைத்தனர். அதன்படி, மறுநாள் தனது தந்தையை மேலும் 35 கி.மீ தூரம் அதே தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.
பத்ரக் மருத்துவமனையின் மருத்துவர்கள் முதற்கட்ட சிகிச்சையளித்து, தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், ஒருவாரம் கழித்து தந்தையை மீண்டும் அழைத்துவருமாறு அறிவுறுத்தினர். தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்க சிறுமியிடம் பணம் இல்லாததால் தள்ளுவண்டியில் தந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவர முடிவு செய்தார்.
இதையும் படிக்க: இம்ரான் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சுமார் 2 கி.மீட்டர் தள்ளுவண்டியில் தந்தையை அழைத்துவந்த சிறுமியை, பத்திரிகையாளர்கள் சிலர் கண்டு விசாரித்தனர். நடந்தவற்றைக் கூறிய சிறுமி, தந்தையை அழைத்துச்செல்ல தன்னிடம் பணம் இல்லை என்றும், ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவமனையில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்றும் கூறினார்.
அதன்பின்னர் பத்திரிகையாளர் முயற்சியில், பத்ரக் எம்எல்ஏ சஞ்சிப் மல்லிக், தாம்நகர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். அவர்களின் தலையீட்டின் பேரில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. சம்புநாதனின் அறுவை சிகிச்சை முடிந்து அவர் குணமடையும் வரை மருத்துவமனையில் இருக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டனர். இந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் நெகிழ வைத்தது.