கேரளத்தின் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கேரளத்தில் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார். சாண்டி உம்மன் மொத்தம் 78,098 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி வேட்பாளர் ஜெயிக் தாமஸைவிட 36,454 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
இதன் மூலமாக சாண்டி உம்மன் தனது தந்தை உம்மன் சாண்டியின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி 33,255 வாக்குகள் வித்தியாசம் என்பதே அதிகபட்சமாக இருந்தது. இதனை சாண்டி உம்மன் இப்போது முறியடித்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவையடுத்து புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
உம்மன் சாண்டி, புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், 10 ஆண்டுகள் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல்: பாஜக கூட்டணியில் ம.ஜ.த.; 4 தொகுதிகள் ஒதுக்கீடு!