ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பயணிகள் பலியாகினர்.
ஸ்ரீநகர் அருகேயுள்ள பட்வாரா பகுதியில் இன்று(ஏப். 16) காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜீலம் ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததே படகு கவிழ்ந்ததற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
படகில் 7 குழந்தைகள் உள்பட மொத்தம் 15 பேர் பயணித்ததாகவும், அவர்களில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூழ்கிய படகிலிருந்து மீட்கபட்டவர்களின் உடல்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அந்த உடல்கலை பார்த்து கதறியழுதனர்.
இதனிடையே, ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மாயமானவர்களை தேடுவது சவாலாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.