ராம நவமி விழா நாளை(ஏப். 17) கொண்டாடப்படுவதையொட்டி அயோத்தியில் விமரிசையாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து, அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் கூறியதாவது, அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்படுவதையொட்டி, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த உற்சாகத்துடன் ராம ஜென்மபூமி கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன என்றார்.
ராம நவமியையொட்டி பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்ய கோயிலுக்கு வருவார்கள என எதிர்பார்க்கப்படுவதால், நாளை(ஏப். 17) ராமர் கோயில் அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை, 19 மணி நேரம் திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு ஏற்பாடாக, அயோத்தி நகரம் முழுவதும் 100 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு ராமர் கோயிலில் நடைபெறும் பூஜைகள் நேரலையில் ஒளிபரப்பட உள்ளன. இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாமல், பொது இடங்களில் இருந்துகொண்டே சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.