மத்தியப் பிரதேசத்தில் இம்முறை 29 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என முதல்வர் மோகன் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவின் போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அலோக் ஷர்மா வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நடைபெற்ற பேணியில் அவர் உரையாற்றினார்.
2014 பாஜக பெரும்பான்மை ஆட்சியை நடத்தும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்பதை முன்னரே நிரூபித்தவர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் என்றும், பிரதமர் நரேந்திர மோடி தற்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்கிறார்.
2014-ல் பாஜகவுக்கு 27 இடங்களையும், 2019-ல் 28 இடங்களையும் கொடுத்த மத்தியப் பிரதேச மக்கள் தாராள மனமுடையவர்கள். இம்முறை சிந்த்வாரா தொகுதியை பாஜக கைப்பற்றுவதற்கு மக்கள் உதவுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில், ஆளும் பாஜக சிந்த்வாராவை காங்கிரஸிடம் இழந்தது. ஆனால் மீதமுள்ள 28 இடங்களை வென்றது. முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத்தின் சொந்த ஊரான சிந்த்வாரா தொகுதியில், 2019ல் அவரது மகன் நகுல்நாத் வெற்றி பெற்றார்.
பாஜகவின் சாகர் தொகுதி வேட்பாளர் லதா வான்கடே மற்றும் பிந்த் தொகுதி வேட்பாளர் சந்தியா ராய் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவர்களுடன் முதல்வர் யாதவும் சென்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.