பாஜக தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து, தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறும் இலக்குடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. அதேவேளையில், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுக்கும் வகையில், சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீதான "அனுதாப அலையை' வாக்குகளாக மாற்றலாம் என நம்புகிறது.
தலைநகரில் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான தீவிர போட்டிக்கு களம் அமைந்துள்ளது.
இதுகுறித்து பாஜகவின் தில்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், "இந்த முறை வெற்றியின் வாக்கு சதவீத வித்தியாசத்தை அதிகரிப்பதை சவாலாக எடுத்துள்ளோம்' என்றார்.
பூர்வாஞ்சலிகள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு தில்லி தொகுதியில் பிகாரை பூர்விகமாக கொண்ட இரு வேட்பாளர்களிடையே கடும் போட்டிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தொகுதியில் மூன்றாவது முறையாக மனோஜ் திவாரியை வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரஸின் கன்னையா குமார் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக இத் தொகுதியில் அறிமுகமாகிறார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பிகாரில் உள்ள பேகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
தில்லியின் மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், "மனோஜ் திவாரி இடத்தைத் தக்கவைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. கம்யூனிஸ்ட் மாணவர் தலைவரான கன்னையா குமாரின் கடந்த காலமும் இடதுசாரிகளுடனான அவரது தொடர்பும் வாக்காளர்களிடையே பிளவு ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்' என்றார்.
கன்னையா குமாரை முன்னிறுத்தி 2025-ஆம் ஆண்டு தில்லி பேரவைத் தேர்தலுக்கு முன் நடைபறும் முக்கியமான இத்தேர்தலில் முத்திரை பதிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தலித் எம்.எல்.ஏ.வான குல்தீப் குமாரை கிழக்குத் தில்லி பொதுத் தொகுதியில் அக்கட்சி நிறுத்தியுள்ளது. இது வெவ்வேறு மக்களவைத் தொகுதிகளில் அமைந்துள்ள 12 சட்டப் பேரவை தனித் தொகுதிகளைச் சேர்ந்த தலித் சமூக வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
கிழக்கு தில்லியில் தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிரான உணர்வு இருப்பதாகவும், இது அத்தொகுதியில் தங்கள் கட்சிக்கு தேர்தலில் பலன் தரும் என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.
2019-இல், கௌதம் கம்பீர் காங்கிரஸின் அர்விந்தர் சிங் லவ்லியை 3.93 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் ஒன்றிணைவது பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். எனினும், 2019-இல் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளை விட அதிகம் என்று பாஜக சுட்டிக்காட்டுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தேசியத் தலைநகரில் பதிவான வாக்குகளில் பாஜக 56.5 சதவீதமும், காங்கிரஸ் 22 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சி 18.1 சதவீதமும் பெற்றன.
மேலும், பாஜக தனது வேட்பாளர்களை அறிவிப்பதில் ஜாதி சமநிலையை மேற்கொள்ள முயன்றிருக்கிறது. கிழக்கு தில்லியில் பஞ்சாபி சமூகத்தைச் சேர்ந்த ஹர்ஷ் மல்ஹோத்ரா, சாந்தினி செளக்கில் பனியா தலைவர் பிரவீண் கண்டேல்வால், தெற்கு தில்லியில் பாஜக எம்எல்ஏ மற்றும் குஜ்ஜர் தலைவரான ராம்வீர் சிங் பிதூரி, மேற்கு தில்லியில் ஜாட் தலைவர் கமல்ஜீத் செஹராவத், தனித் தொகுதியான வடமேற்கு தில்லியில் தலித் தலைவர் யோகேந்திர சந்தோலியா ஆகியோரை அக்கட்சி வேட்பாளர்களாக பாஜக நிறுத்தியுள்ளது.
புது தில்லி மக்களவைத் தொகுதியில் பான்சுரி ஸ்வராஜ் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறார். தில்லியில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் இரண்டில் பான்சுரி ஸ்வராஜ், கமல்ஜீத் செஹராவத் ஆகிய இரு பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது பெண்களின் வாக்குகளை அதிகரிக்க உதவும் என்று பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
புது தில்லி தொகுதியில் சோம்நாத் பார்தி, தெற்கு தில்லியில் சாஹிராம் பெஹல்வான், மேற்கு தில்லியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மகாபல் மிஸ்ரா கிழக்கு தில்லியில் கட்சியின் தலித் எம்.எல்.ஏ.வான குல்தீப் குமார் ஆகியோரை ஆம் ஆத்மி நிறுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 அன்று தனது வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி, கட்சியின் மூத்த தலைவர் ஜெ.பி.அகர்வால் சாந்தினி செளக், முன்னாள் பாஜக எம்.பி. உதித் ராஜ் தனித் தொகுதியான வடமேற்கு தில்லி, கன்னையா குமார் வடகிழக்கு தில்லியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தில்லி அரசின் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள கலால் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அனுதாபத்தின் மூலம் தேர்தல் ஆதாயம் பெற ஆம் ஆத்மி விரும்புகிறது. அக்கட்சியின் பிரசாரமும் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை மையப்படுத்தியே உள்ளது. "கேஜரிவாலின் கைதுக்கு மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளிக்க வேண்டும்' என்று தங்கள் பிரசாரத்தில் வலியுறுத்தி வருகிறது.
இந்தப் பிரசாரம் வெற்றி பெறப் போகிறதா அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் ஆட்சி குறிக்கோள் நிறைவேறப் போகிறதா என்பது குறித்து வாக்குப் பதிவுத் தேதியான மே 25-ஆம் தேதி தில்லி வாக்காளர்கள் தீர்ப்பளிப்பார்கள்.