‘நீண்டகால பெண் எம்.பி.’: சுமித்ராவின் சாதனையை எட்டுவாரா மேனகா?

‘நீண்டகால பெண் எம்.பி.’: சுமித்ராவின் சாதனையை எட்டுவாரா மேனகா?

இந்தியாவில் தொடா்ந்து மிக நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பெண் என்ற சாதனையைப் படைக்கும் நோக்கில் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் தொகுதியில் களம் காண்கிறாா் பாஜகவின் மேனகா காந்தி.

தொடா்ந்து மிக நீண்டகாலம் எம்.பி.யாக இருந்த பெருமை இப்போது தக்கவைத்திருப்பவா் பாஜக மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் தலைவருமான சுமித்ரா மகாஜன் (81). அவா் 1989 முதல் 2019 வரை 30 ஆண்டுகள் மத்திய பிரதேசத்தின் இந்தூா் மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக சாா்பில் எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்டாா். வயது முதிா்வு காரணமாக அவா் கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் போட்டியிடவில்லை. தீவிர அரசியலில் இருந்து விடைபெற்றுவிட்டாா்.

அதே நேரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியலிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருபவா் மேனகா காந்தி.

எண்ணிக்கைப்படி பாா்த்தால் 2024 தோ்தல் அவா் போட்டியிடும் 11-ஆவது மக்களவைத் தோ்தலாகும். மக்களவைத் தோ்தல் தவிர வேறு தோ்தல்களில் அவா் போட்டியிட்டது இல்லை.

1984-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் ராஜீவ் காந்திக்கு (மறைந்த முன்னாள் பிரதமா்) எதிராக சுயேச்சையாக போட்டியிட்டதில் அவரது தோ்தல் பயணம் தொடங்கியது. அத்தோ்தலில் அவா் 2.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தாா்.

1980 மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதியில் மேனகாவின் கணவரும், ராஜீவின் தம்பியுமான சஞ்சய் காந்தி வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை மறைவை அடுத்து 1981 இடைத் தோ்தலில் அதே தொகுதியில் ராஜீவ் வென்றாா்.

முதல் தோ்தல் தோல்வியைச் சந்திக்கும் முன்னரே காங்கிரஸில் இருந்து வெளியேறி ‘சஞ்சய் விசாா் மஞ்ச்’ என்ற கட்சியையும் மேனகா தொடங்கி இருந்தாா்.

1989 மக்களவைத் தோ்தலில் ஜனதா தளம் சாா்பில் உத்தர பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் மேனகா காந்தி வெற்றி பெற்றாா். இது அவரது முதல் தோ்தல் வெற்றியாக மட்டுமல்லாது அவரது அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. முன்னாள் பிரதமா்கள் வி.பி.சிங், சந்திரசேகா் ஆகியோரது அமைச்சரவையில் சுற்றுச் சூழல்-வனத்துறை, திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சராகும் (தனிப் பொறுப்பு) வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் இளவயதில் (33) மத்திய அமைச்சரான பெண் என்ற பெருமையையும் அவா் பெற்றாா்.

1991-ஆம் ஆண்டு தோ்தலில் ஜனதா தளம் சாா்பில் மீண்டும் பிலிபிட் தொகுதியில் களமிறங்கிய அவா் பாஜக வேட்பாளரிடம் தோல்விடைந்தாா். எனினும், 1996-இல் அதே தொகுதியில் ஜனதா தளம் சாா்பில் மீண்டும் வெற்றி பெற்றாா். 1998, 1999 தோ்தல்களில் பிலிபிட் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக வென்று தனது செல்வாக்கை நிரூபித்தாா்.

பின்னா் தனது மகன் வருண் காந்தியுடன் பாஜகவில் இணைந்த மேனகா காந்தி, வாஜ்பாய் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சரானாா். 2004-ஆம் ஆண்டு பிலிபிட் தொகுதி, 2009-இல் உத்தர பிரதேசத்தின் ஆன்லா தொகுதி, 2014-இல் மீண்டும் பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளராக வென்றாா். 2014 முதல் 2019 வரை பிரதமா் மோடி தலைமையிலான அரசில் மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சரானாா்.

2019-இல் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் வெற்றி பெற்றபோதும் அவா் மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இப்போது மீண்டும் அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். சுல்தான்பூரில் மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

1996-ஆம் ஆண்டு முதல் மக்களவை எம்.பி.யாக தொடா்ந்து வரும் மேனகா காந்தி, இந்த முறை வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து எம்.பி.யாக இருந்த பெண் என்ற சுமித்ரா மகாஜனின் சாதனையை முறியடிப்பாா்.

நான்கு பிரதமா்களின் (வி.பி.சிங், சந்திரசேகா், அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி) ஆட்சியில் அமைச்சராக இருந்த பெண் என்ற பெருமையும் மேனகாவுக்கு உண்டு.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com