சமூக ஊடகங்களில் எல்ஐசி நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரங்களை பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
எல்ஐசியின் பெயர், அதன் இலச்சினை ஆகியவற்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அச்சுஅசலாக ’எல்ஐசி நிறுவனம்’ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் போலவே காட்சியளிக்கும் இந்த போலியான விளம்பரங்களை நம்பி, ஏராளமான மக்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஏமாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மக்களுக்காக எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைப் பதிவில், “எல்ஐசி பாலிசிதாரர்களும் மக்களும் இதுபோன்ற போலியான விளம்பரங்களின் உண்மை தன்மையை பரிசோதித்துவிட்டு அதன்பின் செயல்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்ஐசி நிறுவன மூத்த அதிகாரிகளின் பெயர்களும் இந்த மோசடி விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே மக்கள் யாரும் இவற்றை நம்பி ஏமாற வேண்டாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடி நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.