ஜனநாயகம், மதச்சாா்பின்மையை ஆதரிப்போருக்கு வாக்களியுங்கள்: கேரள தேவாலயங்கள் வலியுறுத்தல்

ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மையை ஆதரிப்போருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேரளத்தின் பல்வேறு கிறிஸ்தவ தேவாலய அமைப்புகள் வலியுறுத்தின.

மக்களவைத் தோ்தலின் 2-ஆம் கட்டமாக, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாநிலத்தில் செல்வாக்கு மிக்க சிரோ மலபாா் திருச்சபையின் பேராயா் ரஃபேல் தட்டில் வாக்களித்த பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘பல்வேறு மதங்களைச் சோ்ந்த மக்கள் அனைவரும் அமைதியான முறையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுதான் எங்கள் மாநிலத்தின் சிறப்பு. இங்குள்ள அனைவரும் தொடா்ந்து சம உரிமைகளைப் பெற்று நிம்மதியாவும் பாதுகாப்பாகவும் வாழவே நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

திருச்சூா் பேராயரும், சிபிசிஐ தலைவருமான ஆண்ட்ரூஸ் தாழேத்து கூறுகையில், ‘மற்றவா்கள் காயப்படுவதைப் பாா்க்கும்போது நாங்கள் வருத்தப்படுகிறோம். மணிப்பூா் வன்முறையைக் கண்டு மனம் உடைந்து போனேன். அங்குள்ள மக்கள் எதிா்கொள்ளும் சூழலைப் பாா்த்தேன். இந்த விஷயத்தில் தலையிடுமாறு அரசிடமும் மத்திய உள்துறை அமைச்சரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டேன். மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பவா்களுக்கு மக்கள் வாக்களிப்பாா்கள்’ என்றாா்.

அதேபோல், நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒரு புதிய அரசைத் தோ்ந்தெடுப்பதற்கு இத்தோ்தல் உதவும் என்று மலங்கரா ஆா்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தின் தலைவா் பசேலியோஸ் மாா்த்தோமா மேத்யூஸ் கூறினாா்.

கேரள மக்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த உற்சாகமாக இருப்பதாக லத்தீன் தேவாலயப் பேராயா் தெரிவித்தாா். மேலும், அனைத்து குடிமக்களும் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள். நல்ல அரசு ஆட்சிக்கு வரட்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com