அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று ஆலோசனைக் கூட்டம்
அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது இன்று (ஏப். 27) நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. அதே போல, ரேபரேலி தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பதும் இன்று உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதிகளில் 5-ஆம் கட்ட தேர்தல் நாளான மே.20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி அமேதியிலும் களம் காண வேண்டும் என உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் விரும்புகிறது. ஒருவேளை ராகுல் காந்தி போட்டியிடாவிட்டால் பிரியங்கா காந்தி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அக்கட்சி தலைமையிடம் உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தலைவர் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். இந்த நிலையில், பாஜக வேட்பாளராக அமேதியில் மீண்டும் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபரேலியில் கடந்த 2006 முதல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அவருடைய மகள் பிரியங்கா காந்தி அத்தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுவரை 317 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், இன்று (ஏப். 27) மாலை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடும் அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி, மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com