தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை காவலில் இருந்து விடுவிக்கக் கோரி கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதற்கு தில்லி மதுபான கொள்கை ஊழலுக்குத் தலைமை ஏற்று, சதி திட்டங்கள் தீட்டியதில் முக்கிய நபராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இருந்துள்ளார். இந்த ஊழவில் அதிகம் பயனடைந்தது ஆம் ஆத்மி கட்சி. எனவே, ஒரு குற்றத்திற்காகக் காரணத்துடன் ஒருவரை கைது செய்வது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை மீறுவதாகாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் அளித்தது.
அமலாக்கத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கேஜரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து கட்சிப் பணிகளை முடக்கவும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கேஜரிவால் சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.