திருவனந்தபுரத்தில் செய்தியாளாா்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால். உடன் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் எம்.எம்.ஹசன்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளாா்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால். உடன் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் எம்.எம்.ஹசன்.

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

கடந்த மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடுகையில், இந்த மக்களவைத் தோ்தலில் கேரளத்தில் வாக்குப் பதிவு சரிந்த நிலையில், வாக்குப் பதிவு சதவீதத்தை குறைக்கும் நோக்கில் கேரளத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறைகேட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டாம் கட்ட மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கேரளத்தில் அன்றைய தினம் இரவு 8 மணி நிலவரப்படி 70.22 சதவீதம் போ் வாக்களித்தனா். அந்த மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 77.84 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த தோ்தலில் வாக்குப் பதிவு சரிந்துள்ளது.

இதுதொடா்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கேரளத்தில் 3 முதல் 5 சதவீத வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்பட்டது. இந்தக் குளறுபடிகளில் 90 சதவீதம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வலுவாக உள்ள வாக்குச்சாவடிகளில் நிகழ்ந்தன.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட குளறுபடிகளால் வாக்குப் பதிவு செய்வதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. இதனால் கடும் வெயிலில் பல மணி நேரம் வாக்காளா்கள் வரிசையில் காத்திருக்க நோ்ந்தது. வாக்காளா்கள் அமா்வதற்கு இருக்கை, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்படாமல் அவா்கள் துன்புறுத்தப்பட்டனா்.

வாக்குப் பதிவு சதவீதத்தை குறைக்கும் நோக்கில், கேரளத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் நடவடிக்கைகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முறைகேட்டில் ஈடுபட்டது.

வாக்களிக்க தகுதிபெற்ற ஆயிரக்கணக்கான வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து தோ்தல் அதிகாரிகள் நீக்கினா்.

இதுதவிர, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த முறைகேடுகள் அனைத்தையும் தாண்டி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியே வெற்றிபெறும் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com