நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது என்று சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புனேவில் அவர் செய்தியாளர்களுககு அளித்த பேட்டியில், பாராமதி மக்களவை போட்டி மகாராஷ்டிரத்தின் பெருமைக்கான போராட்டம். மாநிலத்தில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 30-35 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். உத்தவ் தாக்கரே பாராமதி தொகுதியின் கீழ் வரும் கடக்வசலாவில் விரைவில் பிரசாரம் மேற்கொள்வார். மகாராஷ்டிர மக்கள் அனைவரும் சுப்ரியா சுலேவின் பின்னால் முழுமையாக உள்ளனர், அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வார்கள்.
வெற்றி பெறுவதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அஜித் பவார் ஏன் பாராமதியில் மக்களை அச்சுறுத்துகிறார். அஜித் பவார் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆளும் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு மாறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் மாவல் தொகுதியில் தனது மகன் பர்த்தின் வெற்றியை அஜித் பவாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. தற்போது அவரது மனைவியின் தோல்விக்கான செயல்முறை தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். இந்திரா காந்தி சிக்கலில் இருந்தபோது, பால் தாக்கரே அவருக்கு ஆதரவளித்தார். இரு தலைவர்களும் அன்பான உறவைப் பகிர்ந்து கொண்டனர். பாராமதி மக்களவைத் தொகுதியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.