பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்(மனதின் குரல்)’ நிகழ்ச்சியை கேட்க மக்களுக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளுக்கும், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக, சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, ஃபதேபூர் சிக்ரி, ஃபிரோஸாபாத், மையின்புரி, எட்டா, படான், ஆம்லா மற்றும் பரேலி ஆகிய 10 தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அகிலேஷ் யாதவ், இன்று(ஏப். 28) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “இந்த தேர்தலில் ‘மன் கி பாத்(மனதின் குரல்)’ நிகழ்ச்சியை கேட்க மக்கள் விரும்பவில்லை, ‘அரசமைப்பின் குரலைக்’ கேட்கவே விரும்புகின்றனர். அம்பேத்கரின் அரசமைப்பை மாற்றியெழுத பாஜக முயல்கிறது. இதன் கரணமாகவே மக்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள்” என்றார்.