பிகாரில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பயணம் செய்த ஹெலிகாப்டா் வானில் பறக்க புறப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது.
மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 3-ஆம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிகாரின் 5 தொகுதிகளுக்கு 3-ம் கட்ட தோ்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, அந்த மாநிலத்தின் பேகுசாராய் பகுதியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை ஈடுபட்டாா்.
அந்தப் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு, தான் வந்திருந்த ஹெலிகாப்டரில் அமித் ஷா புறப்பட தயாரானாா். அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டா் தரையிலிருந்து எழும்பி வானில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கு பலத்த காற்று வீச, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டா் நிலை தடுமாறி, பக்கவாட்டில் இழுத்துச் செல்லப்பட்டது.
சில அடி உயரம் பறந்த ஹெலிகாப்டா் மீண்டும் தரையை நெருங்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டரை சில விநாடிகளில் கட்டுக்குள் கொண்டு வந்த பைலட் திறம்பட செயல்பட்டு, சீராக மேலே பறக்கும் வகையில் இயக்கினாா். இதனால் அதிருஷ்டவசமாக அமித் ஷா விபத்திலிருந்து தப்பினாா்.