காங்கிரஸ் ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்தத் திட்டம் உள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தின் சதாராவில் திங்கள்கிழமை(ஏப். 29) நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”கர்நாடகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளையும் இடஒதுக்கீட்டையும் காங்கிரஸ் பறித்துக் கொண்டதோடு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு இருந்து வந்தது. ஆனால், ஒரே இரவில், அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துவிட்டது ஆளும் காங்கிரஸ் கட்சி.
இதே திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.இந்திய அரசமைப்பு மத அடிப்படியிலான இடஒதுக்கீட்டை தடை செய்கிறது. பீம்ராவ் அம்பேத்கர் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தடை செய்தார்.
மோடி உயிருடன் இருக்கும் வரை, அரசமைப்பை மாற்றும் முயற்சியையும், மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முயற்சியையும் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.