பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முன்னதாக, அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது கட்சியின் மூத்த தலைவா் சம்பய் சோரன் ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்றார்.
முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏப்.24ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மேலும், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி மே 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.