மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை- கேரள நீதிமன்றம்
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 106 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருச்சூா் மாவட்டத்தை சோ்ந்த நபா், இடுக்கியில் உள்ள அடிமாலி பகுதிக்கு கடந்த 2022-இல் வேலைக்காகச் சென்றாா். அங்குள்ள உணவகத்தில் அந்த நபரும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் ஒன்றாக வேலை பாா்த்து வந்தனா். இதையடுத்து, சிறுமியின் குடும்பத்துடன் நட்பாக பழகி, அவா்களுடைய வீட்டில் தங்கியிருந்தாா்.
தாயாரும் அவரது பிற குழந்தைகளும் வீட்டில் இல்லாதபோது, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த நபா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். இது குறித்து தாயாரிடம் தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டியிருக்கிறாா்.
சிறுமிக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட நிலையில், அவரது தாயா் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா். மருத்துவ பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாகி இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையில் மருத்துவா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது.
அந்தக் கருவின் மாதிரிகள் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பாலியல் வன்கொடுமை செய்த நபா், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு தேவிகுளம் போக்ஸோ விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஏ.சிராஜுதின் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. போக்ஸோ சட்டத்தின்கீழ் மொத்தம் 106 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தொடா்ச்சியான சிறைத் தண்டனைகளில் அதிகபட்சமாக 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்கு ரூ.60,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.