மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஆசிரியர் பணியிட தேர்வு மூலம் அரசு உதவி பெறும் மற்றும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் என 25,753 நியமனங்களை ரத்து செய்து கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி மேற்கண்ட 24,000 பேரிடமும் அவர்கள் வாங்கிய சம்பளத் தொகையைத் திருப்பியளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று(ஏப். 29) விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு தரப்பில், எவ்வித அதிகாரப்பூர்வ ஆவணமுமின்றி வெறும் செய்திகளை மையமாகக் கொண்டு உயர்நீதிமன்றம் மேற்கணட் உத்தரவை பிறப்பித்துள்ளதாக வாதிடப்பட்டது. இந்த பணியிழப்பு உத்தரவால் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகியிருப்பதாகவும் வாதிடப்பட்டது.
இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிம்னறம் மறுத்துவிட்டது. எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதெனவும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.