கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் நில அபகரிப்பு புகார் அளித்த கிராமவாசிகளை சிபிஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை சந்தித்தது.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு ஏராளமான பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் சந்தேஷ்காளிக்கு சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை சென்றது.
அப்போது நில அபகரிப்பு புகார் அளித்த கிராமவாசிகளை சந்தித்துப் பேசி, அவர்களின் நில ஆவணங்களை அக்குழு ஆராய்ந்தது என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.