உளவு பார்த்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கத்தார் சிறையில் இருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் இந்தியாவுக்கு திரும்பியதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “ தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்களை கத்தார் அரசு விடுதலை செய்திருப்பதை இந்தியா வரவேற்கிறது. அவர்களில் ஏழு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். இந்தியர்களின் விடுதலையையும் அவர்களை நாட்டுக்கு அனுப்பிய முடிவையும் எடுத்ததற்கு கத்தார் மன்னரைப் பாராட்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோஹாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் 2023 அக்டோபர்,23-ல் மரண தண்டனை விதித்தது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களை மீட்க இந்தியா அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
பொதுவெளியில் அவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கை வெளியிடப்படவில்லை. நவ.9,2023 அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சட்டக் குழு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆவணங்களைப் பெற்று ராஜ்ய தலையீட்டை மேற்கொண்டது.