பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஆற்றுக்கால் பொங்கல் விழா இன்று(பிப்.25) கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்தே பொங்கல் வைக்க உகந்த இடத்தைத் தேர்வு செய்ய பக்தர்கள் வரத் தொடங்கிவிட்டனர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாள்கள் திருவிழாவின் இறுதிநாளான இன்று(பிப்.25) காலை 10.30 மணியளவில் பொங்கல் வைபவம் தொடங்கியது. முதலில் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த ‘பண்டார அடுப்பு’ என்றழைக்கப்படும் பொங்கல் அடுப்பை, பக்தர்களின் சரண கோஷம் முழங்க கோயில் தலைமை அர்ச்சகர் கோசாலை விஷ்ணு வாசுதேவன் நம்பூதிரி பற்ற வைத்து பொங்கல் விழாவை தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் பொங்கலிடத் தொடங்கினர்.
கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் திருவனந்தபுரத்தில் திரண்டு சாலைகளில் வழிநெடுக பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
இதையொட்டி, திருவனந்தபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் வைக்க வரும் பக்தர்கள் வசதிக்காக, கோயிலுக்கு அருகேயுள்ள சில தேவாலயங்கள் தங்களது வெளி அரங்குகளை பொங்கல் வைக்க ஏதுவாக திறந்து வைத்திருந்த சுவாரசிய நிகழ்வும் இன்று அரங்கேறியது.