காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஹிந்து கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவின்போது பேசிய ராகுல் காந்தி ஹிந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளதாகவும், சக்தி என்றால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் சக்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருப்பதாக விமர்சித்தார். அந்த சக்திக்கு எதிராக நாம் போராடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத், ஹிந்து கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவர் தனது தவறை திருத்திக்கொள்வார் என நினைத்தோம். ஆனால், ஒருநாள் ஆன பிறகும் கூட அவர் தனது உரையிலிருந்த தவறை உணரவில்லை. அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் அவரின் பேச்சை நியாயப்படுதும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
மகாத்மா காந்தியின் சித்தாந்தம் மற்றும் கோட்பாட்டை கொண்ட காங்கிரஸாக ராகுல் காந்தி வழிநடத்தும் காங்கிரஸ் இருக்காது. ஹிந்துக்களுக்கு எதிரான மற்றும் மாவோயிஸ்ட் சிந்தையுடைய தலைமையைக் கொண்டது.
தற்போது பேசியது போன்று வேறு மதங்களைச் சேர்ந்த கடவுள் அல்லது கோட்பாட்டை குறிப்பிட்டு பேச ராகுல் காந்திக்கு கைரியம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.