கேஜரிவாலை கண்டு பாஜக அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கேஜரிவால் கைது செய்யப்படுவார் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். கேஜரிவால் போன்ற பெரிய தலைவர் பிரசாரம் செய்வதை அவர்கள் (பாஜக) விரும்பவில்லை. மக்களவைத் தேர்தலில் கேஜரிவால் பிரசாரம் செய்வதை தடுக்கவே அவரை மத்திய பாஜக அரசு கைது செய்துள்ளது.
அவரைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. எனவேதான், அவரையும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க விரும்புகிறார்கள். அரசியல் ரீதியால் பழிவாங்கும் நோக்குடனேயே கேஜரிவால் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள சரத் ரெட்டி, கேஜரிவாலை சந்திக்கவே இல்லை என்று முதலில் கூறியிருந்தார்.
சிறையில் விசாரணை நடத்தியபோது கேஜரிவாலை சந்தித்து உள்ளதாக சரத் ரெட்டி கூறியுள்ளார். தற்போது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சரத் ரெட்டி ரூ.55 கோடி கொடுத்திருப்பது அம்பலமாகி உள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிரான விசாரணை அமைப்பின் குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை மற்றும் நிரூபிக்கப்படாதவை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.