தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை 7 நாள்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், இன்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து, தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும் 7 நாள் விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்ட நிலையில், அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 1-ம் வரை காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.