மும்பை: மும்பையில் உள்ள பாலிவுட் நடிகா் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட அனுஜ் தபான், மும்பை காவல்துறை காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுஜ் தாபன், கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பஞ்சாப்பிலிருந்து கைது செய்யப்பட்டார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு வெளியே கடந்த ஏப்.14-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறை, பிகாரைச் சோ்ந்த விக்கி குப்தா, சாகா் பால் ஆகியோரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் நாட்டு துப்பாக்கிகளை வழங்கியதாக சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆலோசனையின்படி இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடா்புடைய விக்கி குப்தா, சாகா் பால், சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன், லாரன்ஸ் பிஷ்னோய், அன்மோல் பிஷ்னோய் ஆகியோருக்கு எதிராக மகாராஷ்டிரத்தின் திட்டமிட்ட குற்றச்செயலை தடுப்பதற்கான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.