கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக, ’ரத்தம் உறைதல்’ ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக, ’ரத்தம் உறைதல்’ ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி, உலகம் முழுவதும் தற்போது பரவலகப் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஷால் திவாரி என்ற வழக்குரைஞர் தாகல் செய்துள்ள மனுவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தலைமையில் மருத்துவக் குழு அமைத்து, இந்த தடுப்பூசியால் உண்டாகும் பக்கவிளைவுகள் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் உடலில் பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டோர், தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் உயிரிழந்தோர் என தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணத் தொகை வழங்கும் நடைமுறையை அமல்படுத்திட மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்தவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.