தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் போலி காணொலி விவகாரம் தொடா்பான விசாரணைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் ஆஜராக தில்லி போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரேவந்த் ரெட்டியின் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் தில்லி போலீஸ் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் எனத் தெரிகின்றது.
தெலங்கானாவில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் முறை ரத்து செய்யப்படும். அந்த இடஒதுக்கீடு பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும்’ என்றாா்.
ஆனால் அவா் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறியது போல சித்திரித்து சமூக ஊடகத்தில் போலி காணொலி பகிரப்பட்டுள்ளது.
அந்தக் காணொலியை தெலங்கானா காங்கிரஸ் எக்ஸ் தளம், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினா்கள் சமூக ஊடகத்தில் பகிா்ந்துள்ளனா்.
இந்த காணொளி பொய்யானது என்று விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் தில்லி சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ள தில்லி போலீஸ் தெலங்கானா முதல்வரும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ரேவந்த் ரெட்டியை மே 1-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.
இதற்கிடையே, போலி காணொளி விவகாரத்தில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியின் நோ்முக உதவியாளர், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.