தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் கேஜரிவால் ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கேஜரிவாலின் கைதைக் கண்டித்து தில்லி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே.7-ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேஜரிவாலுக்கு மக்கள் தங்களின் செய்திகளை எழுதுவதற்காக லஜ்பத் நகரில் இரண்டு வெள்ளை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தில்லி மக்கள் முதல்வரை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதைக் காட்டும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி ஜங்புரா எம்எல்ஏ பிரவீன் குமார் கூறினார்.
இந்தப் பிரசாரத்தை லப்ஜப் நகரிலிருந்து தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வோம். இந்த கையெழுத்துகளைச் சேகரித்து பாஜகவுக்கு அனுப்புவோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் "ஜெயில் கா ஜவாப் வோட் சே தேங்கே" மற்றும் அரவிந்த் "கேஜரிவால் ஜிந்தாபாத்" என்ற கோஷங்களும் கட்சியினரால் எழுப்பப்பட்டன. முதல்வர் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்ட விதம் குறித்து தில்லி மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.