தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!
தில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் வருகை பாதியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தில்லி மற்றும் தேசியத் தலைநகரின் என்சிஆா் பகுதியில் சுமார் 200 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரே மாதிரியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததையடுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பரவலான பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தீவிர சோதனையில் அந்த மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்ததாக தில்லி காவல் துறை புதன்கிழமை தெரிவித்தது.
இந்தநிலையில், இன்று பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால் அச்சுறுத்தல் இல்லாத பள்ளிகளில் கூட மாணவர்கள் வருகை பாதித்துள்ளது என சில பள்ளிகளின் முதல்வர்கள் தெரிவித்தனர்.
இது மர்மநபர்கள் சிலர் ஏற்படுத்தும் புரளியே தவிர, பெற்றோர்கள் பீதியடையத் தேவையில்லை எனப் பள்ளி முதல்வர்கள் பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனர். நேற்று கல்வி அமைச்சா் அதிஷியும் பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இருப்பினும் வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவில்லை, மாணவர்களின் வருகை பாதியாகக் குறைந்துள்ளதாக பல்வேறு பள்ளிகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.