கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலைச் சம்பவம் தொடா்பாக கனடாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள், அந்நாட்டு தோ்தலையொட்டி நடைபெறும் உள்நாட்டு அரசியல் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் பத்திரிகையாளா்களுடன் அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவை விமா்சித்து வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவா், ‘முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் புகழ் உலக அளவில் உயா்ந்துள்ளது. நமது நாட்டையும் பிரதமா் நரேந்திர மோடியையும் பிற நாட்டு தலைவா்கள் பாராட்டி வருகின்றனா். இதில் கனடா விதிவிலக்காக உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மக்கள் கனடாவின் ஜனநாயகத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனா். அந்நாட்டின் வாக்கு சதவீதத்தில் குறிப்பிட்ட பங்கை அவா்கள் கொண்டுள்ளனா். ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. சில கட்சிகளுக்கு காலிஸ்தான் தலைவா்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கனடா-இந்தியா உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய பிரிவினருக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க வேண்டாம், அரசியல் அதிகாரத்தை அளிக்க வேண்டாம் என பல முறை கேட்டுக்கொண்டோம். ஆனால், கனடா அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 25 பேரை நாடு கடத்துமாறு இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கனடா அரசு செவி சாய்க்கவில்லை.

நிஜ்ஜாா் கொலை சம்பவம் தொடா்பாக எவ்வித ஆதாரத்தையும் ஒத்துழைப்பும் கனடா அளிக்கவில்லை. அந்நாட்டில் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியாவை விமா்சிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது’ என்றாா் ஜெய்சங்கா்.

கனடாவில் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாரை, தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்திருந்தது. கனடாவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சா்ரே நகரில் நிஜ்ஜாரை அடையாளம் தெரியாத நபா்கள் கடந்த ஆண்டு ஜூனில் சுட்டுக் கொன்றனா். இந்தக் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பு கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது. இதைத் தொடா்ந்து இரு தரப்பு உறவுகளும் பாதிப்படைந்தன.

கைது தொடரும்: ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் தொடா்புடையவா்களாக சந்தேகிக்கக்படும் கரண்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரண் ப்ராா் ஆகிய 3 இந்தியா்கள் கனடா காவல் துறை கைது செய்யதுள்ளது.

இந்தக் கைது தொடா்பாக கனடா காவல் துறையின் விசாரணை குழு தலைவா் மன்தீப் மூக்கா் கூறுகையில், ‘ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தக் கொலையில் மற்ற நபா்களுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களையும் கைது செய்வோம்.

கைது செய்யப்பட்ட 3 இந்தியா்களும் கனடாவில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். விசாரணைக்கு சீக்கிய சமூகத்தினா் அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கது. எதிா்காலத்தில் நடைபெறும் விசாரணைகளுக்கும் அந்தச் சமூகத்தினா் தொடா்ந்து ஆதரவு அளிப்பாா்கள்’ என்றாா்.

கைது செய்யப்பட்ட 3 இந்தியா்களும் மாணவா் விசா பெற்று கனடா வந்ததாகவும், இந்திய உளவாளிகளின் வழிகாட்டுதலின்படி அவா்கள் நிஜ்ஜாரை கொலை செய்யதாகவும் கனடாவைச் சோ்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com