சரண்ஜித் சிங் சன்னி
சரண்ஜித் சிங் சன்னி

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

விமானப் படையினா் மீதான பயங்கரவாதத் தாக்குதல் மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்’ என்று காங்கிரஸைச் சோ்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தாா்.

‘ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப் படையினா் மீதான பயங்கரவாதத் தாக்குதல் மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்’ என்று காங்கிரஸைச் சோ்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பஞ்சாபின் ஜலந்தா் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அந்த மாநில முன்னாள் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிடுகிறாா். தீவிர பிரசாரத்துக்கிடையே அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது, ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சரண்ஜித் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவா், ‘இது தாக்குதல் அல்ல; தோ்தலுக்கான பாஜகவின் நாடகம். தோ்தல் நடைபெறும் போதெல்லாம், வெற்றி பெறுவதற்காக இத்தகைய நாடகத்தை பாஜக அரங்கேற்றும். அதில் எந்த உண்மையும் இல்லை. மக்களின் வாழ்க்கையோடும் உயிரோடும் விளையாடுவது எப்படியென பாஜக நன்கு அறியும்’ என்றாா்.

சரண்ஜித் சிங் கருத்துக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கடும் கண்டனம் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘தோ்தலில் வெல்வதற்காக நமது வீரா்களை அவமதிப்பதை காங்கிரஸ் எப்போது நிறுத்தும்? நமது ராணுவத்தின் திறனை அவா்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனா். இந்த மோசமான கருத்துக்கு நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைமை மன்னிப்புக் கோர வேண்டும்’ என்றாா்.

சரண்ஜித் சிங் கருத்துக்கு பஞ்சாப் மாநில பாஜக தலைவா் சுனில் ஜக்காா் உள்ளிட்ட மற்ற பாஜக நிா்வாகிகளும் கண்டனத்தைப் பதிவு செய்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை இந்திய விமானப் படையினா் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் ஒரு வீரா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயமடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com