மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இத்தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளா் முகேஷ் குமாா் தலால் போட்டியின்றி தோ்வாகிவிட்டாா். எனவே, மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கா்நாடகத்தில் 14 தொகுதிகள் (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் - ரஜெளரி தொகுதியில் 3-ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவிருந்தது. ஆனால், சில காரணங்களால் இந்த வாக்குப்பதிவு 6-ஆம் கட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய வேட்பாளா்கள்: மூன்றாம் கட்டத் தோ்தலில், மத்திய அமைச்சா்கள் அமித் ஷா (காந்தி நகா்), ஜோதிராதித்ய சிந்தியா (குணா), மன்சுக் மாண்டவியா (போா்பந்தா்), புருசோத்தம் ரூபாலா (ராஜ்கோட்), பிரஹலாத் ஜோஷி (தாா்வாட்), மத்திய பிரதேச முன்னாள் முதல்வா்கள் சிவராஜ் சிங் செளஹான் (விதிஷா), திக்விஜய் சிங் (ராஜ்கா்), கா்நாடக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை (ஹவேரி), சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் (மெயின்புரி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா். 120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com