முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!
தில்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி கவிதா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் கவிதாவின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், கலால் முறைகேடு வழக்கில் கவிதாவின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும், கவிதாவின் மீது ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்றும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, இன்றுடன் காவிதாவின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா மேலும் ஒரு வாரத்திற்கு(மே 14) காவல் நீட்டித்துள்ளார்.