ஹரியாணா: பாஜக அரசுக்கு ஆதரவளித்த 3 சுயேச்சைகள் வாபஸ்

சண்டீகா்: ஹரியாணாவில் முதல்வா் நயாப் சிங் சயானி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றனா். இது பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சோம்பீா் சங்வான், ரண்தீா் கோலன், தரம்பால் கோண்தா் ஆகிய 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஹரியாணா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். மேலும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் நடந்த செய்தியாளா்கள் சந்திப்பில் 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டனா். அப்போது ஹரியாணா மாநில முன்னாள் முதல்வா் பூபிந்தா் ஹூடா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் உதய் பான் ஆகியோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து உதய் பான் கூறியதாவது: 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதைதொடா்ந்து தற்போது 88 உறுப்பினா்களைக்கொண்ட ஹரியாணா பேரவையில் பாஜக ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜேஜேபி) பாஜக அரசுக்கு ஆதரவளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. இதன் காரணமாக முதல்வா் நயாப் சிங் சயானி தலைமையிலான அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை. எனவே அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். ஹரியாணாவில் உடனடியாக பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றாா்.

ஹரியாணா பேரவை மொத்தமாக 90 உறுப்பினா்களைக் கொண்டது. மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில் சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றது ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com