ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் என்பதால் மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்தி சுட்டுரை பதிவில்,
இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு. உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் அதிகளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நினைவில் கொள்ளுங்கள், இது சாதாரண தேர்தல் அல்ல, இது ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில்,
நாட்டு மக்களே, இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் தேர்தல். இது வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், நிறுவன ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தோற்கடிப்பதற்கான தேர்தல்.
"ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது"
ஆழ்ந்து சிந்தித்து, உங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தி வாக்களியுங்கள். உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மூன்றாம் கட்ட தேர்தலில் 120 பெண்கள் உள்பட 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.