வங்கதேச எம்பி அன்வருல் அஸிம் அனாரை கொலை செய்ய அவரது நண்பர் கொலையாளிக்கு ரூ.5 கோடி கொடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை உயர் அதிகாரி வியாழக்கிழமை கூறினார்.
கடந்த மே 13 ஆம் தேதி காணாமல் போன அன்வருல், கொலை செய்யப்பட்டதாகவும், கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கதேச உள்துறை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து மேற்குவங்க காவல் துறை அதிகாரி கூறுகையில், ''இந்த வழக்கு மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட கொலை. இந்த கொலையை செய்ய கிட்டத்தட்ட ரூ.5 கோடி வரை அவரின் நண்பர் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது'' என்றார்.
மேலும், 'அனார் கொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் அவரது உடல் இன்னும் மீட்கப்படவில்லை. கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள நியூ டவுனில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பின் அடுக்குமாடி கட்டடத்தில் ரத்தக் கறைகள் கடந்த மே 13 அன்று கண்டுபிடிக்கப்பட்டது' என்று சிஐடி ஐஜி அகிலேஷ் சதுர்வேதி புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மே 12 அன்று கொல்கத்தா வந்த அனார், கோபால் பிஸ்வாஸின் வீட்டில் தங்கியிருந்தார். அவர் காணாமல் போன ஆறு நாட்களுக்குப் பிறகு, வடக்கு கொல்கத்தாவில் உள்ள பாராநகரில் வசிக்கும் கோபால் பிஸ்வாஸ், உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பிஸ்வாஸ் தனது புகாரில், மே 13 மருத்துவரை சந்திப்பதற்காக அனார் தனது பாராநகரில் உள்ள வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதே நேரத்தில் இரவு உணவிற்கு வீட்டிற்கு வருவேன் எனக் கூறியதாக தெரிவித்தார்.
ஆனால், அவர் வீட்டுக்கு வராததால் மே 17 ஆம் புகார் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.