‘ரீமெல்’ புயல் இன்றிரவு கரையைக் கடக்கிறது!
DOTCOM

‘ரீமெல்’ புயல் இன்றிரவு கரையைக் கடக்கிறது!

மத்திய வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான ‘ரீமெல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை (மே 26) இரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா, மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவு இடையே கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 135 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு புயலாக வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாரா என்ற பகுதியிலிருந்து சுமாா் 360 கி.மீ. தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு வங்கம்- சாகா் தீவிலிருந்து 350 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகா்ந்து வருகிறது. இது ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா- மேற்கு வங்கத்தின் சாகா் தீவு இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது தரைக்காற்று மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இந்த நிகழ்வின் காரணமாக ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை (மே 26-31) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரியில் கனமழை: இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக குமரி மாவட்டம் மைலாடியில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மே 26, 27) குமரிக் கடல் பகுதி, மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

வெப்பநிலை உயரும்: இதனிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஞாயிறு முதல் புதன்கிழமை (மே 26-29) வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com