

கேரளத்தில் பசி காரணமாக இறந்த பூனையின் இறைச்சியை இளைஞர் ஒருவர் அப்படியே சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள குட்டிப்புரம் பேருந்து நிலையத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் இறந்த பூனையின் பச்சை இறைச்சி சனிக்கிழமை சாப்பிட்டுள்ளார். இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் அசாமில் உள்ள துப்ரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாங்கள் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டோம். அப்போது கடந்த ஐந்து நாட்களாக உணவு எதுவும் சாப்பிடவில்லை என்று அந்த இளைஞர் கூறினார். உடனே அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தோம். அதனை எந்த தயக்கமும் இல்லாமல் பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த இளைஞர், சிறிது நேரம் கழித்து யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.
தொடர்ந்து அந்த இளைஞர் உள்ளூர் ரயில் நிலையத்தில் திரிவதாக வந்த தகவலையடுத்து இன்று காலை காவல்துறையினர் அங்கு விரைந்தோம். அப்போது, சென்னையில் வேலை பார்க்கும் தனது அண்ணனின் மொபைல் நம்பரை அந்த இளைஞர் எங்களிடம் கொடுத்தார். நாங்கள் அவரைத் தொடர்புகொண்டு தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்தினோம். வடகிழக்கு மாநிலத்தில் கல்லூரியில் படித்த அந்த இளைஞர், தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் டிசம்பரில் ரயிலில் கேரளம் வந்துள்ளார்.
முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அந்த இளைஞர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த இளைஞருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ எந்தப் பிரச்னையும் இல்லை. உறவினர்கள் இங்கு வந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். கேரளத்தில் இளைஞர் ஒருவர் உணவின்றி பசியின் கொடுமையால் இறந்த பூனையின் இறைச்சியை சாப்பிட்ட நிகழ்வு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.